
விடியற் காலைப் பொழுதில்
வாசலில் தண்ணீர் தெளித்து
நொடியில் பெருக்கிக் கூட்டி
நோண்பாய் கோலம் போடுவாள்
வரிசை யாகப் புள்ளி
வாஞ்சை யோடு வைப்பாள்
அரிசி மாவில் கோலம்
அழகாய் அக்கா இடுவாள்
தரையில் பூத்த பூவாய்
தோன்றும் அழகு கோலம்
நிறைந்த இன்பம் கொடுக்கும்
நின்று பார்க்கத் தூண்டும்
எறும்பு ஊர்ந்து வந்து
எடுத்து மாவை உண்ணும்
விரும்பி மகளிர் எப்போதும்
வியந்து போடும் கோலம்

