Saturday, February 4, 2012

மாட்டு வண்டி

கடகடவென்றே உருண்டு ஓடும்
கட்டை மாட்டு வண்டி-இது
காளை மாட்டு வண்டி

தடதடவென்றே உருண்டு ஓடும்
தமிழர் மாட்டு வண்டி-இது
தாவும் மாட்டு வண்டி

இலாடம் பூட்டிய காளை இழுக்கும்
இரட்டை மாட்டு வண்டி-இது
விரட்ட பறக்கும் வண்டி

மரச் சக்கரம் இரும்பைப் போர்த்தி
மாடு இழுக்கும் வண்டி- இது
காடும் கடக்கும் வண்டி

நுகத்தடிப் பூட்ட நோஞ்சான் மாடும்
நொண்டி இழுக்கும் வண்டி- இது
சண்டி மாட்டு வண்டி

Thursday, January 26, 2012

பொங்கல்

புதுப்பானை வைத்திடுவோம் பொங்கலோ பொங்கல்
புத்தரிசி இட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
களித்து நாங்கள் மகிழ்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்

மாடுகளை மதித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
மாக்கோலம் போட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
பாடுபட்ட உழவர்களைப் பொங்கலோ பொங்கல்
பாராட்டி வாழ்த்திடுவோம் பொங்கலோ பொங்கல்

பெரியோரை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
பெற்றிடுவோம் ஆசிகளை பொங்கலோ பொங்கல்
வறியோர்க்கு வழங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
வயல்வெளியை தொழுதிடுவோம் பொங்கலோ பொங்கல்

கரும்புண்டு களித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
கவலையின்றி கூடிடுவோம் பொங்கலோ பொங்கல்
பிரிவினைகள் இல்லாமல் பொங்கலோ பொங்கல்
பிறர்மகிழ சேர்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்

Sunday, January 22, 2012

கடை

புளியமர நிழலிலே
பூரணிப் பாட்டிக் கடையிலே
இட்டிலி வடையும் விற்கிறார்
இன்பமாய் வாங்கி உண்ணலாம்

எண்ணெய் அதிகம் இல்லாமல்
எந்த சாயமும் சேர்க்காமல்
மண்ணைச் சார்ந்த உணவுகள்
மணக்க மணக்கக் கிடைக்குமே

பயறு கிழங்கு அவித்தவை
பழங்கள் பலவும் அரியவை
வயிறு நிரம்ப உண்ணலாம்
வாராது நோய்கள் திண்ணமாம்

ஆவியல் வெந்த கொழுக்கட்டை
அரிசிமாவுப் புட்டுவகை
அனைவரும் உண்டு மகிழலாம்
அன்பாய் பாட்டியை வணங்கலாம்

Friday, January 20, 2012

சூறாவளி

சுத்திச் சுத்திக் காத்தடிக்குது
சூறா வளிக் காத்தடிக்குது
கத்திக் கத்திக் காக்கைகளும்
கண்ட திசையில் கண்மறையுது

தென்னை மரங்கள் நாணலைப்போல்
தேகம் வலைந்து ஒடியுது
பண்ணை வயலின் நெற்கதிர்கள்
பாய்ந்து தூரம் பறக்குது

ஓலைக் குடிசை காலியாகுது
ஓட்டு வீடும் ஓட்டையாகுது
ஆல மரமும் அடிசாயுது
ஆக மக்கள் அலைபாயுது

படகும் பறந்து கரையேகுது
பலா வாழை மரம் சாயுது
விடாது புயலும் விரட்டுது
விழிப்பாய் இருப்பது நல்லது.

Tuesday, January 17, 2012

யாழினி

அம்மா அப்பா சொல்கேட்டு
அழகாய் பள்ளிச் சென்றிடுவேன்
சும்மா சோம்பிக் குந்தாமல்
சுறுசுறுப் பாக ஆடிடுவேன்

நாளும் குறளைப் படித்திடுவேன்
நாட்டு நடப்புகள் அறிந்திடுவேன்
கேளிர் சேர்ந்தே வாழ்ந்திடுவேன்
கேள்விகள் கேட்டே தெளிந்திடுவேன்

கூண்டுக் கிளியாய் இல்லாமல்
குவலயம் சுற்றி வந்திடுவேன்
ஈன்ற தாயை வணங்கிடுவேன்
என்றும் தந்தை மதித்திடுவேன்

பாட்டும் கூத்தும் கற்றிடுவேன்
பழந்தமிழ் கலைகள் காத்திடுவேன்
வாட்டும் வறுமை சூழ்ந்தாலும்
வாழ்வில் நேர்மை கடைபிடிப்பேன்

Saturday, January 14, 2012

உழவன்

ஏரைக் கொண்டு நிலம் உழுவான்
எல்லோ ருக்கும் உணவ ளிப்பான்
பாரை உயர்த்த உழைத்திடுவான்
பட்டினி யின்றிக் காத்திடுவான்

காலைக் கருக்கலில் எழுந்திடுவான்
கலப்பை தோளில் சுமந்திடுவான்
ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்
ஓயாமல் உழைப்பை ஈந்திடுவான்

கால்நடைக் காத்து மகிழ்ந்திடுவான்
கவலை மறந்தே வாழ்ந்திடுவான்
தோல் கருப்பாக இருந்தாலும்
தூய உள்ளம் பெற்றிருப்பான்

உழவர் உழைப்பை மதித்திடுவோம்
உண்மை அன்பால் வாழ்த்திடுவோம்
மழையைப் போலே பலன்கருதா
மான்பைப் போற்றி வணங்கிடுவோம்.

Thursday, January 12, 2012

மண் பானை

குயவர் செய்த பானை
குளிர்ச்சி யான பானை
வயலின் சேற்றில் மணலை
கலந்து செய்த பானை

தண்ணீர் பிடித்து வைக்க
தமிழர் செய்த பானை
மண்ணின் கொடையாம் பானை
மக்கள் விரும்பும் பானை

இடுப்பில் பானை வைத்தே
இளைய பெண்டிர் போவார்
குடிப்பதற்கு தண்ணீர்
கொண்டு வந்தே சேர்ப்பார்

பானைத் தண்ணீர் குடித்தால்
பக்க விளைவே இல்லை
தேனைப் போன்ற நீரை
தினமும் குடித்து மகிழ்வோம்

Wednesday, January 11, 2012

பள்ளிக்கூடம்

நண்பர்கள் தோளில் கைபோட்டு
நானும் பள்ளிக்குச் சென்றிடுவேன்
நன்றாய் நானும் படித்திடுவேன்
நல்ல பேரை எடுத்திடுவேன்

சொல்லிக் கொடுக்கும் பாடங்களை
தொல்லை யில்லாமல் கேட்டிடுவேன்
மல்லிகைப் பூவின் மணம் போலே
மகிழ்ச்சி யாக ஏற்றிடுவேன்

படிக்காத பிள்ளைகள் படும்பாட்டை
பார்த்து நானும் படித்திடுவேன்
படித்து நானும் அறிவாலே
பலவுயர் தகுதிகள் அடைந்திடுவேன்

என்றன் வயதுப் பிள்ளைகளே
என்னோடு பள்ளிக்கு வாருங்கள்
நன்றாய் கல்விக் கற்றே நாம்
நாட்டை உயர்த்த உழைத்திடுவோம்

Monday, January 9, 2012

தமிழ்ப் பேசு

பாப்பா பாப்பா தமிழ்ப் பேசு
பச்சைக் கிளியைப் போல் பேசு
தம்பித் தம்பித் தமிழ்ப் பேசு
தாய் மொழி தானே நீ பேசு

அம்மா அப்பா எனச் சொல்லு
ஆங்கிலம் வேண்டாம் அயற்சொல்லு
மாமா அத்தை எனச் சொல்லு
மகிழ்ச்சி யாலே நீத் துள்ளு

வணக்கம் நன்றி எனச் சொல்லு
வாழ்வாய் தமிழ்போல் நீவென்று
இனிப் பென்றால்தான் நெஞ்சினிக்கும்
சிரிப் பென்றால்தான் களிப்பிருக்கும்

பனி யென்றால்தான் குளிரடிக்கும்
பாலென்றால் தான் பசிமறையும்
இனியும் இதைநீ மறவாதே
இனிய தமிழில் நீபேசு

Sunday, January 8, 2012

ஆலமரம்

அடி பெருத்த ஆலமரம்
அழகு விழுது ஆலமரம்
கிளை படர்ந்த ஆலமரம்
கிளிகள் கொஞ்சும் ஆலமரம்

சிறிய விதையில் பிறந்த மரம்
பெருமரமாய் வளர்ந்த மரம்
சிறுவர் ஆட நிழல் தரும்
பெரியோர் கூட இடம் தரும்

விழுதில் ஊஞ்சல் ஆடலாம்
விளையாடி நாளும் மகிழலாம்
இலையில் சோறு உண்ணலாம்
இயற்கை அழகை பருகலாம்

ஊரில் உள்ளோர் கூடும் மரம்
உழைப்பவர் ஓய்வு எடுக்கும் மரம்
பாரில் பசுமை ஆலமரம்
பாலர் போற்றிப் பாடுவோம்

Saturday, January 7, 2012

பாட்டு

அம்மா பாடும் பாட்டு
அழகான தாலாட்டு
அப்பா பாடும் பாட்டு
அறிவை வளர்க்கும் பாட்டு

அண்ணன் பாடும் பாட்டு
அச்சம் ஓட்டும் பாட்டு
அக்கா பாடும் பாட்டு
அன்பை கூட்டும் பாட்டு

தம்பி பாடும் பாட்டு
தமிழ் வெல்லப் பாட்டு
தங்கைப் பாடும் பாட்டு
தெங்கின் இனிமை பாட்டு

ஒன்றாய் சேர்ந்துப் பாடுவோம்
நன்றாய் சிரித்து ஆடுவோம்
கன்றாய் களித்து ஓடுவோம்
கவலை மறந்து கூடுவோம்

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...